சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்கு 28 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதி கடும் விபத்து ஏற்பட்டது.
மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் மெலக்கா வட்டாரத்திற்கு அருகே நேற்று (ஜன.13) அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
இதில் சென்னையைச் சேர்ந்த 17 வயது பெண் சுற்றுலாப் பயணி கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பின்னர் அவர் உயிரிழந்தார்.
கொழுந்து விட்டு எரிந்த பேருந்தில் அந்த பெண் சிக்கிக் கொண்டதாக தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள்
மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் நால்வரும் காயமடைந்தனர்.
அவர்களின் வயது 19 முதல் 69 வயது வரை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
எஞ்சிய 23 பயணிகள்
பேருந்தில் பயணித்த எஞ்சிய 23 பயணிகள், 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பேருந்தில் இருந்த இரண்டு ஓட்டுனர்களுக்கு காயமடையவில்லை என்று உள்ளூர் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
இந்த விபத்து சனிக்கிழமை அதிகாலை 3:50 மணியளவில் நடந்ததாக போலீஸ் தலைவர் மலேசிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
விசாரணைகள்
உயிரிழந்த பெண்ணின் சடலம் கூடுதல் பரிசோதனைக்காக மெலக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிற்து.