தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோலுக்கு அருகே இடாவோன் பகுதியில் கடந்த அக்டோபர் 29- ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். கூட்டம் மேலும் அதிகரித்ததையடுத்து, மிகவும் குறுகலான பாதையில் மொத்த கூட்டமும் வெளியேற முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசல், மூச்சுத் திணறல் காரணமாக 151 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பூங்காவில் மரக்கன்றை நட்டு வைத்த இந்திய தூதர்!
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள அவர்களில் பலர் கவலைக்கிடமான வகையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அக்டோபர் 30- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருநாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்றும், இறந்தவர்களில் 19 வெளிநாட்டினரும் அடங்குவர் என்றும், 300- க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தென்கொரிய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், தென்கொரிய அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சியோலின் இடாவோனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Republic of Korea President Yoon Suk-yeol) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கடிதம் எழுதியுள்ளார்.
சியோலில் (Seoul) உள்ள சிங்கப்பூர் தூதரகம் (Singapore’s Embassy) உள்ளூர் அதிகாரிகளுடன் நிலைமை குறித்து நெருங்கிய தொடர்பில் உள்ளது. காயமடைந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களில் சிங்கப்பூரர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தற்போது இல்லை. அங்கு நிலவும் சூழல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம், தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தூதரக உதவி தேவைப்படும் சியோலில் உள்ள சிங்கப்பூரர்கள் சியோலில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தை +82-10-7204-6240 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தை +65 6379 8800/8855 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.