சிங்கப்பூரில் அரசு மேற்கொண்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அதேபோல், நாளுக்கு நாள் கொரோனா மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 77% பேர் முழுமையாக, அதாவது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டை விட்டு வெளியே வர முடியாத முதியவர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவக் குழுவினர் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு வருகின்றனர். மேலும், மற்ற முதியவர்கள் முன்பதிவு இல்லாமல் தடுப்பூசி நிலையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி எதிர்பார்த்ததை விட உயர்வு!
அதேபோல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதைக் கட்டாயமாக்கியுள்ளது. அதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது.
குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள முன்னணி விமான நிறுவனங்களான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் (Singapore Airlines Group), ஸ்கூட் (Scoot), ஜெட்ஸ்டார் ஆசியா (Jetstar Asia) ஆகிய மூன்று விமான நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. இதேபோல், பல்வேறு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவையும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டிருப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக் கூட போட்டுக் கொள்ளாத 64 வயது முதியவருக்கு, ஆகஸ்ட் 2- ஆம் தேதி அன்று இருமல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அடுத்த நாளில் அவருக்கு இதய பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து, அந்த முதியவர் ராஃபிள்ஸ் மருத்துவமனையில் (Raffles Hospital) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.
கனமழையைத் தொடர்ந்து, வேன் மீது விழுந்த 7 மாடி உயர மரம்…
அதன் தொடர்ச்சியாக, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், “முதியவர் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக் கூட போட்டுக்கொள்ளவில்லை. அவரது உடலில் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் இருந்தது” எனக் கூறியுள்ளது.
நேற்றைய (18/08/2021) நிலவரப்படி, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் சுமார் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.