சிங்கப்பூரில் முதியவர் ஒருவர், குடும்பத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
25 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணைப் பல முறை கட்டியணைத்து முத்தமிட்டதற்காக, 67 வயதான அந்த முதியவருக்கு நேற்று (ஜூன் 22) நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் சமூக அளவில் இந்திய நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் பாதிப்பு..!
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்கும் அடிப்படையில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
அந்த வீட்டுப் பணிப்பெண் கடந்த 2018 டிசம்பர் முதல் முதியவரின் குடும்பத்திற்கு வேலை செய்யத் தொடங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டை சுத்தம் செய்வதற்கும், முதியவரின் பிறந்த பேத்தியைப் பராமரிப்பதற்கும் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி காலை 7 மணியளவில், குழந்தையின் பால் பாட்டில்களை சமையலறையில் கழுவிக் கொண்டிருந்தபோது, முதியவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் அவர் பணிப்பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, அந்த பெண்ணை விரும்புவதாகவும், நேசிப்பதாகவும் கூறியுள்ளார். இதை விரும்பாத அந்த பெண் வயதானவரை தள்ளிவிட்டு, சமையலறையை விட்டு வெளியேறி அறைக்கு சென்றார்.
பின்னர் தொடர்ந்து தகாத வேலையை அவர் தொடர, அந்த பணிப்பெண் சம்பவம் தொடர்பாக நண்பரிடம் கூறினார், பிறகு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, நீதிமன்ற விசாரணையில் முதியவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த குற்றச் செயலுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் 50 வயதைத் தாண்டியதால் அவருக்குப் பிரம்படி விதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க : தன்ஜோங் பகர் மற்றும் ஹாலந்து-புக்கிட் தீமா பகுதிகளில் சிறப்புத் திட்டங்கள்..!