வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் கழிவு தொட்டி தாக்கியதில் 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (அக் 9) பிற்பகல் 3 மணியளவில், 371B செம்பவாங் அவென்யூவில் உள்ள வேலையிடத்தில் நடந்தது என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்தது.
இதில் 29 வயதான பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த கட்டுமான ஊழியர் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
சன் சேல்ஸ் பில்ட்-டு-ஆர்டர் (BTO) திட்ட கட்டுமான தளத்தின் 10வது மாடியில் அவர் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது கழிவு தொட்டியை தூக்கிக் கொண்டிருந்த கிரேன் ஆபரேட்டருக்கு அவர் வழிகாட்டிக்கொண்டிருந்தார், அந்த தொட்டி அசைந்து அவரைத் தாக்கியது.
அது வலுவாக தாக்கியதால், கீழே விழாமல் பொருத்தப்படும் பாதுகாப்பு தடைகளை உடைத்து கொண்டு அதனோடு சேர்ந்து அவர் தரையில் விழுந்தார்.
விபத்து நடந்த பிறகு வேலையிடத்தில் இருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் CNA விடம் தெரிவித்தனர்.
அதனை அடுத்து அந்த ஊழியர் சுயநினைவின்றி கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் இறந்ததாக MOM கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 14 வேலையிட இறப்புகள் பதிவாகியுள்ளதாக MOM சொன்னது.