மெரினா பே சாண்ட்ஸ் (MBS) டாக்ஸி ஸ்டாண்டில் உள்ள பல டாக்சி ஓட்டுநர்கள் வெளிநாட்டு பயணிகளிடம் குறுகிய பயணங்களுக்கு கூட அதிக கட்டணங்களை கேட்பதாக கூறப்பட்டுள்ளது.
டாக்சி ஓட்டுநர்களின் இந்த செயல் குறித்த செய்தியை 8world நியூஸ் வெளியிட்டுள்ளது.
வேறு டாக்ஸி இல்லை என்பது போல விறுவிறுப்பாக தங்களை காட்டிக்கொள்ளும் சில ஓட்டுநர்கள், 5 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள ஆர்ச்சர்ட் சாலைக்கு செல்ல S$50 முதல் S$65 வரை கட்டணத்தை கேட்டதாக 8world நியூஸ் கூறியுள்ளது.
அதில், இந்தியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சுற்றுலா வந்துள்ளனர். அந்த ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் முதியவர்களும் குழந்தைகளும் இருந்தனர்.
அந்த குடும்பத்தில் ஒருவர் வாகனத்தில் ஏறுவதற்கு சற்று முன்பு 8world நிருபரிடம் கூறியதாவது; தான் லிட்டில் இந்தியாவுக்குச் செல்வதாகவும், ஓட்டுநர் S$65 கட்டணம் கேட்பதாகவும் கூறினார்.
MBS டாக்ஸி ஸ்டாண்டில் இருந்து லிட்டில் இந்தியா வெறும் 3.2 கிமீ தொலைவில் தான் உள்ளது.
“கட்டணம் மிகவும் அதிகம், ஓட்டுநர் தன்னிச்சையாக கட்டணங்களை வசூல் செய்கின்றனர் என்பது எனக்குத் தெரியும்” என்றார் இந்தியர்.
“ஆனால் என்ன செய்வது மழை பெய்து கொண்டு இருக்கிறது, குழந்தை மற்றும் முதியவர்வர்களும் உடன் இருக்கிறார்கள், ஷாப்பிங் செய்து சோர்வாகவும் நாங்கள் இருக்கிறோம்,” என்று அந்த இந்திய சுற்றுலாப் பயணி கூறினார்.
அதேபோல, அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு சுற்றுலாப் பயணியும் சிங்கப்பூரில் இப்படியொரு நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.
இதற்கு பதிலளித்த MBS செய்தித் தொடர்பாளர்; இதுபோன்ற நிலைமையைக் கண்காணிக்க அதிகமானோரை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறினார்.
இது போன்ற சட்ட விரோத செயல்களை கடுமையாக பார்ப்பதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கூறியுள்ளது.