ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் (Satish Dhawan Space Centre) உள்ள இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி53 (PSLV-C53) ராக்கெட் நாளை (30/06/2022) மாலை 06.00 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (29/06/2022) மாலை 05.00 PM மணிக்கு தொடங்கியது. இந்த பிஎஸ்எல்வி- சி53 ராக்கெட்டில் இந்திய நாட்டின் தகவல் தொடர்புக்கு தேவையான புவியைத் துல்லியமாகப் புகைப்படம் எடுக்கக் கூடிய முதன்மைச் செயற்கைக் கோளான DS-EO என்ற செயற்கைக்கோள் இடம் பெற்றுள்ளது. இதனுடன் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மூன்று செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன.
இந்த நிலையில், ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மற்றொரு புறம், ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராக்கெட் ஏவுவதை நேரடியாகப் பார்ப்பதற்காக, பொதுமக்கள் இஸ்ரோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களுக்கான அனுமதி சீட்டை https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/regprint1.jsp என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவு எண் (அல்லது) ஆதார் எண் உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை எண்களைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.