எரிந்த சிகரெட் துண்டை வீசி தீயை ஏற்படுத்தியதாக ஆடவர் ஒருவர் மீது நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 12) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி 28 அன்று, தெம்பனீஸ் அவென்யூ 5, பிளாக் 941ல் – 63 வயதான லோ பு வாஹ் கவனக்குறைவாக தீயை ஏற்படுத்தியதாக குற்றம் பதிவானது.
படுக்கையறை தரையில் மண்ணெண்ணெய் படிந்து இருந்த போது, அவர் சிகரெட்டை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடி வீடு மற்றும் வீட்டின் நுழைவாயிலில் உள்ள பொதுவான நடைபாதை ஆகியவை சேதமடைந்தன.
மேலும் அங்கிருந்த அண்டை வீட்டார்கள் சுமார் 180 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் நீதிமன்றத்திற்குத் திரும்பும் லோ குற்றத்தை ஒப்புக்கொள்ள உள்ளார்.
கவனக்குறைவாக தீயை ஏற்படுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் 18 மாதங்கள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.