பான் தீவு விரைவுச்சாலையில் (PIE) வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோ குவான் சாலையை விட்டு வெளியேறிய பின், துவாஸ் நோக்கி செல்லும் பான் தீவு விரைவுச்சாலையில் வேனும் லாரியும் விபத்துக்குள்ளானதாக இன்று (டிச.31) காலை 7.36 மணிக்கு தகவல் வந்ததாக காவல்துறை கூறியது.
கவிழ்ந்த வாகனத்திற்குள் வேன் ஓட்டுநரும் பயணி ஒருவரும் சிக்கிக் கொண்டதாகவும், பின்னர் ஹைட்ராலிக் மீட்புக் கருவியின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.
ஆனால், 21 வயதான ஆண் பயணி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்களால் உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் 18 வயது ஓட்டுநர் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடார்.
இது குறித்த புகைப்படங்கள் Singapore Road Accident என்ற முகநூல் குழுவில் வெளியிடப்பட்டது.
மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் நடந்து வருகிறது.