மது அருந்தி விட்டு, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சக தங்கும் விடுதி ஊழியரின் முகத்தில் குத்தி, அவரது விரலை கடித்ததால் விரலில் முறிவு ஏற்பட்டது.
செம்பவாங்கில் உள்ள தங்கும் விடுதியில் அவர்கள் இருவரும் சண்டையிட்டு தரையில் விழுந்து ஒருவருக்கொருவர் கடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் திரு கிருஷ்ணன் கார்த்திகேயன் (வயது 35) என்ற வெளிநாட்டு ஊழியர் பாதிக்கப்பட்டுள்ளார்.
சிறை தண்டனை
இந்திய நாட்டை சேர்ந்த 30 வயதான ஊழியர் ரெங்கசாமி கரல்மார்க்ஸ் என்பவர் இன்று (டிசம்பர் 23) குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது ?
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை, 51 Cochrane லாட்ஜ் 1ன் மூன்றாவது மாடியில் தண்ணீர் பாட்டில் காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சனை தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.
மாடியின் கீழே நின்றிருந்த ரெங்கசாமி மீது தண்ணீர் பட்டதாகவும், இதனால் அவர் கிருஷ்ணனை நோக்கி விரைந்தார் என்றும், அவர்களுக்குள் வாதம் ஏற்பட்டது ஆனால் சண்டையிடவில்லை என்றும் துணை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை அடுத்து செப்.5ம் தேதி இரவு, ரெங்கசாமி தனது அறைக்கு வெளியே பீர் குடித்துவிட்டு குடிபோதையில் இருந்தபோது, மீண்டும் மூன்றாவது மாடியில் இருந்து தண்ணீர் சொட்டுவதை உணர்ந்தார்.
அவர் முந்தைய சம்பவத்தை நினைவு கூர்ந்து கிருஷ்ணனை தேடி மீண்டும் மாடிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட ரெங்கசாமி, கிருஷ்ணனின் மூக்கில் குத்தி தரையில் தள்ளியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
கிருஷ்ணன் கீழே விழுந்து கிடந்த நேரத்தில், ரெங்கசாமி பல முறை குத்தியதாகவும், மேலும் அவரது மோதிர விரலைக் கடித்ததாகவும், இதனால் இரத்தம் வெளியேறியது என்றும் வழக்கறிஞர் கூறினார்.
அதனை அடுத்து சிறிது நேரத்தில் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது, பின்னர் கிருஷ்ணன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது விரலில் எலும்பு முறிவு, தலையில் சிறிய காயம் மற்றும் கடித்த காயம் காரணமாக அவருக்கு 14 நாட்கள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.