மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, சிங்கப்பூருக்கு வந்துள்ள இந்திய கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மே 30- ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு (Nanyang Technological University- ‘NTU’) சென்றார். அங்கு அவருக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
பல்கலைக்கழகத்தைச் சுற்றிப் பார்த்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், வகுப்பறையில் செய்யப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார். நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், பேராசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட இந்திய அமைச்சர், கல்வி, ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைக் குறித்து கலந்துரையாடினார்.
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…. தமிழக பிரபலங்கள் பங்கேற்கும் கலை ஆராதனை!
அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர் வருகைப் பதிவேட்டில், இந்திய அமைச்சர் கையெழுத்திட்டார். பின்னர், பிற்பகல் 03.00 மணியளவில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனைச் சந்தித்த இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இரு நாடுகளிடையேயான திறன் மேம்பாடு, உயர்கல்வி உள்ளிட்டவைக் குறித்து ஆலோசித்தார்.