ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள பனாமா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எரிகா மௌய்ன்ஸ் (Minister of Foreign Affairs of the Republic of Panama Erika Mouynes), நேற்று (11/04/2022) இஸ்தானாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தலைவர்களும் சிங்கப்பூர் மற்றும் பனாமா இடையேயான நல்லுறவை மீண்டும் மறுஉறுதிச் செய்துக் கொண்டுள்ளனர்.
சிங்கப்பூருக்கும், பனாமாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவையொட்டி, இரு தலைவர்களும் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆழமாகக் கலந்துரையாடினர். தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சிக்கான உள்நாட்டுக் கொள்கைகள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசியானுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க பனாமாவின் ஆர்வத்தை பிரதமர் லீ வரவேற்றார்.
முன்னதாக, பனாமா வெளியுறவுத்துறை அமைச்சர், இன்று (12/04/2022) சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது அவருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் காலை உணவு விருந்தளித்தார். அதன் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர், போக்குவரத்து மூத்த அமைச்சர் உள்ளிட்டோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசவிருக்கிறார்.
MRT ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து, தன் பிறப்புறுப்பை காட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, அபராதம்
ஏப்ரல் 9- ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பனாமா வெளியுறவுத்துறை அமைச்சர், நாளை (13/04/2022) மாலை வரை அவர் இங்கு இருப்பார் என சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பனாமா வெளியுறவுத்துறை அமைச்சருடன், அந்நாட்டின் மூத்த அதிகாரிகளும் சிங்கப்பூர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.