சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களைக் கவலையடையச் செய்துள்ளது. குறிப்பாக, கடந்த சில தினங்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 1,000- ஐ கடந்துள்ளது. இன்று (25/09/2021) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (24/09/2021) கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், “சிங்கப்பூரில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் உணவு, பானக் கடைகளில் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள், ஐந்து பேர் வரை ஒன்றாக அமர்ந்து உணவருந்த தற்போது அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை மாற்றப்படுகிறது.
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் இனி உணவகங்கள் மற்றும் உணவு, பானக் கடைகளில் இரண்டு பேர் வரை மட்டுமே ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழைக் காட்டினால் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
சிங்கப்பூரில் வேலை தேடுவோரைவிட வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது; மனிதவள அமைச்சர்.!
அதேபோல், கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களும், 12 வயதுக்கு குறைவான நபர்களும் அனுமதிக்கப்படுவர். புதிய நடைமுறையைப் பின்பற்ற இயலாத உணவகங்கள் உணவைகளைப் பொட்டலமிட்டு எடுத்துச் செல்லும் சேவையை மட்டும் வழங்கலாம். இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 24- ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பின்னர், சூழ்நிலையைப் பொறுத்து கட்டுப்பாடுகள் மறு ஆய்வு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.