சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் இன்றியமையாத பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக “Our Migrants’ Kitchen” என்று அழைக்கப்படும் புதிய நூல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் தேதி சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக கொண்டாடப்படும், இந்நிலையில் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் விதமாக இந்நூல் அதற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூலில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு ஊழியர்களின் சிங்கப்பூர் அனுபவங்களும், அவர்களின் சொந்த ஊர் சமையல் குறிப்புகளும் இடம்பெற்று இருக்கும்.
அனுபவங்கள் என்றால் ஊழியர்கள் சொந்த நாட்டில் இருந்து இங்கு வந்தது முதல் அவர்களின் வேலை, சமையல், நட்புகள் போன்றவை இடம்பெற்றிருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழா Our Tampines Hub இல் நடந்தது, அதோடு அவர்களுக்கான கண்காட்சியும் தொடங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 33 வயதான திரு தாயுமானரன் நாகரெத்தினம் என்ற ஊழியர், 2010 இல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தார்.
எலக்ட்ரீஷியன் வேலை பார்க்கும் அவர் உணவு தான் மருந்து என்பதை அதிகம் நம்புகிறார். விவசாயிகளான அவரின் பெற்றோர்களிடம் இருந்து பல்வேறு உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சிறப்புகளை அவர் சிறுவயதிலிருந்தே கற்று தேர்ந்துள்ளார்.
அவர் தனது 12 வது வயதில் சமைக்கக் கற்றுக்கொண்டாராம். சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு பொதுவாக இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தமிழ் குடும்பங்கள் தயாரிக்கும் நண்டு ரசம் (நண்டு சூப்) செய்முறையை அவர் அந்த நூலில் பகிர்ந்துள்ளார்.
கருப்பு மிளகு மற்றும் சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் சளியை முற்றிலும் அழிக்க உதவுகிறது, மேலும் இந்த உணவு உடல் வலிகளையும் குறைக்கிறது என்று திரு நாகா தமிழில் கூறினார்.
தங்கும் விடுதியில் உள்ள அறை தோழர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவ்வாறான உணவுகளை அவர்களுக்கு சமைத்து கொடுப்பாராம்.
அந்த சூப், அவர்களின் தலைவலியை உடனடியாகக் குறைத்து உடல்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சியையும் வழங்கும் என அவர் கூறினார்.