சிங்கப்பூரில் பாசிர் ரிஸ் HDB பிளாட்டில் தொங்கிய நிலையில் காணப்பட்ட ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது பொது அமைதிக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்று Singapore Incidents என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி வைரலானது.
அந்த ஆடவர் காற்றோட்டக் குழாயில் இருந்து தலைகீழாகத் தொங்குவதை அந்த வீடியோ வாயிலாக காணலாம், அதே நேரத்தில் அந்த இடத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் சூழ்ந்து இருப்பதையும் காண முடிந்தது.
அதில், அவரை போலீசார் கூரையில் இருந்து கீழே இறக்க கடுமையாக முயற்சி செய்கின்றனர். ஆனால், ஆடவரின் தலை பகுதி மட்டுமே குழாய் வழியாக வெளியே தெரிகிறது.
மேலும் அந்த ஆடவர் சத்தம் போடுவதையும் நம்மால் காண முடிகிறது. முதலில் அவரை அங்குள்ளவர்கள் மலை பாம்பு என நினைத்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஏப். 23 அன்று இரவு 11:26 மணிக்கு பாசிர் ரிஸ் டிரைவ் 6ல் உள்ள பிளாக் 469ல் 45 வயதான முகமது நசீர் பின் அஹ்மத் என்ற அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக 8world செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கத்தரிக்கோலைப் பயன்படுத்தி, நடைபாதையில் உள்ள ஜன்னலைத் தட்டி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறப்படுகிறது.
பொது அமைதிக்கு இடையூறு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், S$2,000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.