சீனாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் மீண்டும் அச்சத்திலுள்ளனர். இந்த நிலையில் ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஓமிக்ரான் BF.7 வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியா பிரதமர் நரேந்திர மோடி, இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
வயதானத் தாயைக் காணவிரும்புவதாகக் கூறிய கைதி! – சீனாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்த கதை!
அதை தொடர்ந்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை அடங்கிய கடிதத்தை அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து டிசம்பர் 22- ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ரேண்டம் முறையில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளில் 2% பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ‘ஏர் சுவிதா’ (Air Suvidha) இணையதளப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களின் சுய விவரங்கள் மற்றும் பயணத்திற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி- பிசிஆர் பரிசோதனை முடிவில் கொரோனா நெகடிவ் சான்றுகளை குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி!
இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் ஜனவரி 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத பயணிகள் இந்திய விமானங்களில் ஏறுவதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
RT-PCR test has been made mandatory for flyers coming from China, Hong Kong, Japan, South Korea, Singapore and Thailand from 1st January 2023. They will have to upload their reports on the Air Suvidha portal before travel.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 29, 2022
கடந்த 2020- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஏர் சுவிதா’ இணையதளப் பதிவு தொடங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் மீண்டும் தற்போது ‘ஏர் சுவிதா’ இணையதளம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.