சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கிகள் இருந்ததாக கூறி 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இந்நிலையில், ஷாங்காய் சோங் கீ பர்னிச்சர் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற அந்நிறுவனத்தை கலைத்து விட்டு ஊழியர்களுக்கு சேரவேண்டிய சம்பளத் தொகையை கொடுத்துவிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் நடத்திய அந்த போராட்டத்தைத் தொடர்ந்து வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் மனிதவள அமைச்சகம் (MOM) நடத்திய விசாரணைக்கு மத்தியில் நிறுவனத்தை கலைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2022 அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்பபடி, நிலுவையில் உள்ள 268 ஊழியர்களுக்கான ஊதியத்தின் ஒரு பகுதியை நிறுவனம் செலுத்தியிருந்தாலும், மீதமுள்ள தொகையை முறைப்படி செலுத்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக MOM தெரிவித்துள்ளது.
இதில் நிறுவனத்தின் சார்பாக செயல்படும் சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட நபரிடம், ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் குறித்து கோரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் MOM மற்றும் TADM கூறியுள்ளது.
நிறுவனம் மூடுவதால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு சுமார் S$300,000க்கும் அதிகமான தொகையை வழங்க பாதுகாப்பு பத்திர காப்பீட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக TADM தெரிவித்துள்ளது.