சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தரப்பினர் கவலை அடைந்துள்ளனர். கட்டுக்குள் இருந்த பாதிப்பு மீண்டும் சற்று அதிகரித்து வருவதை சமீபத்தில் காண முடிகிறது.
அதற்கு ஒரு படி மேலே விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் கவலை அடைந்துள்ளதாக வலைத்தளங்களில் குறிப்பிடுகின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக விடுதிகளில் அடைந்து கிடைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது தான், குறைந்த அளவில் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அந்த கட்டுப்பாடு தளர்வு கடந்த செப்டம்பர் 13 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட 500 ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் ஆறு மணி நேரம் லிட்டில் இந்தியா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மனிதவள அமைச்சகம் கூறியது.
அச்சமயம் மகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு, தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் சூழலில், விடுதிகளிலும் கடுமையாக்கப்படுமோ என்ற கவலையை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 1000ஐ தாண்டி பதிவாகி வருகிறது, அதே போல இறப்புகளும் 2, 3 என பதிவாகிறது.
குறிப்பாக, தங்கும் விடுதிகளில் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. ப்ளூ ஸ்டார்ஸ், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட தங்கும் விடுதிகளில் பாதிப்பு தொடர்ந்து கண்டறியப்படுவதை சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் மூலம் நாம் காண முடிகிறது.
சொந்த நாட்டிற்கு எப்போது செல்வோம்.. தன் மனைவி மக்களை எப்போது பார்போம்.. என்ற தவிப்பில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு யாராலும் ஆறுதல் கூற முடியாது.
சிங்கப்பூர் அரசாங்கம் மீண்டும் இதனை சிறப்பாக கையாண்டு, அனைத்து கவலைகளையும் போக்கும் என்ற ஒரே நம்பிக்கையுடன் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர்.