சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (செப்.08) இரவு இந்தியாவுக்கு செல்கிறார்.
இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று (செப்.08) இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு செல்கிறார்.
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் லீ சியன் லூங், மாநாட்டிற்கிடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார். செப்டம்பர் 10- ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் லீ சியன் லூங், பன்முகத்தன்மை, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சுகாதாரம், பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி, வர்த்தகம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த ஜி20 மாநாட்டு கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
உக்ரைனுக்கு ஆம்புலன்ஸ்களை வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு!
சிங்கப்பூர் பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலக அமைச்சர், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாவது அமைச்சர் இந்திராணி ராஜா, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் மூத்த உயரதிகாரிகளும் இந்தியாவுக்கு செல்லவிருக்கின்றனர்.
பிரதமர் லீ சியன் லூங் இல்லாத நேரத்தில் துணை பிரதமர் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், செயல் பிரதமராக இருப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.