சிங்கப்பூரில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் முழு தடுப்பூசி போடாத டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து வாகனம் ஓட்ட முடியாது என்றும், அவர்கள் தங்கள் வேலை ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை மூத்த அமைச்சர் எமி கோர், நேற்று ஜனவரி 13ம் தேதி முகநூல் பதிவில் இதை பகிர்ந்துள்ளார்.
இவ்வாறான டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் வேலை ஒப்பந்தங்கள் இடைநிறுத்தப்பட்ட காலத்தில் வாடகை செலுத்த வேண்டியதில்லை.
இந்த வேலை ஒப்பந்தங்களின் இடைநிறுத்தம், டாக்ஸி ஓட்டுநர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டவுடன் முடிவடையும்.
சுமார் 300க்கும் மேற்பட்ட மருத்துவ ரீதியாக தகுதியுள்ள ஓட்டுநர்கள் இன்னும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை கூட போட்டுக்கொள்ளவில்லை என்று கோர் கூறினார்.
சுமார் 66,500 டாக்ஸி மற்றும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.