விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் (Vistara Airlines), சிங்கப்பூர், மும்பை இடையே இரு மார்க்கத்திலும் தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (18/01/2023) காலை 11.00 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UK106 என்ற பயணிகள் விமானம் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டது.
அரசுமுறைப் பயணமாக புரூணை சென்றுள்ள சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங்!
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மலேசியாவின் வான் பகுதியில் வட்டமிட்டது. பின்னர், சாங்கி விமான நிலையத்தின் அதிகாரிகளைத் தொடர்புக் கொண்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள், விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதிக் கோரினர். அதைத் தொடர்ந்து, அனுமதி கிடைத்ததை அடுத்து, விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கினர். இந்த தகவலை ‘Flightradar’ இணையதளத்தில் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை விமான நிறுவனம் செய்துக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, பெரும்பாலான பயணிகள், மற்ற விமானங்களில் மாற்றிவிடப்பட்டதாக விஸ்தாரா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதனிடையே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.