இந்தியாவின் கர்நாடகா மாநிலம், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது மணிப்பால் மருத்துவமனை. இதன் தாய் நிறுவனம், மணிப்பால் ஹெல்த் எண்டர்பிரைசஸ் ஆகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மணிப்பால் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், மணிப்பால் ஹெல்த் எண்டர்பிரைசஸ் நிறுவனம் (Manipal Health Enterprises), கொல்கத்தாவைச் சேர்ந்த ‘AMRI’ என்ற மருத்துவமனையை ரூபாய் 2,400 கோடிக்கு கையகப்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிங்கப்பூர் அரசு நிறுவனமான டெமாசெக் நிதி நிறுவனம் (Temasek), ஷீயர்ஸ் ஹெல்த் (Sheares Health) என்ற நிறுவனத்தை தன் வசம் வைத்துள்ளது. இந்த நிறுவனம், மணிப்பால் மருத்துவமனையின் 18% பங்குகளை ஏற்கனவே தன் வசம் வைத்துள்ள நிலையில், தற்போது முதலீட்டாளர்களிடம் இருந்து கூடுதலாக 41% பங்குகளை சுமார் 16,000 கோடி ரூபாய் செலுத்தி வாங்கியுள்ளது.
மொத்தம் 59% பங்குகளைக் கொண்டுள்ள டெமாசெக் நிறுவனம், மணிப்பால் மருத்துவமனைகளை கையகப்படுத்தியுள்ளது. மேலும், மணிப்பால் மருத்துவமனையின் மதிப்பு ரூபாய் 29,000 கோடியாக உயர்ந்துள்ளது. இன்னும் கூடுதல் பங்குகளைப் பெற்று மணிப்பால் மருத்துவமனை மற்றும் அதன் கிளைகளை முழுமையாக டெமாசெக் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.