சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா வருகின்ற ஜனவரி 28ம் தேதி COVID-19 கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தைப்பூசத் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுப்பதற்கான இணையதள முன்பதிவு இன்று (03-01-2021) முதல் தொடங்கியுள்ளது.
பால்குடம் எடுக்க விருப்பமுள்ள பக்தர்கள், www.sttemple.com என்ற இணையதளம் மூலம் இன்று காலை 8 மணி முதல் ஜனவரி 24ம் தேதி இரவு 8 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தொடர் கனமழை… 20 இடங்களில் மரங்கள், கிளைகள் முறிவு
மேலும், ஆலயத்தில் முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட பால்குடங்களை மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஆலயம் வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது:
- பால்குடம் எடுக்கும் பக்தருடன் ஒருவர் மட்டுமே துணையாக செல்ல அனுமதிக்கப்படுவர்.
- ஆலயத்தில் பொது தரிசனம் செய்ய விரும்புவோர், தாம் உட்பட ஐந்து பேருக்குப் பதிந்து கொள்ளமுடியும்.
- பதிவு செய்த ஆவணங்களுடன், நேரில் செல்வோருக்கு மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படும்.
- உடலில் அலகு குத்தியவர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பால்குடம் எடுக்கவும் அனுமதியில்லை.
- முடி காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், ஆலய அலுவலகத்தைத் தொடர்புக் கொண்டு, முன்னதாகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
- தைப்பூசத்திற்கு முன்தினமும் மற்றும் தைப்பூசத் தினத்தன்றும் முடி காணிக்கை செலுத்த முடியாது.
- வயது முதிர்ந்தவர்கள், சிறுவர்கள் மற்றும் நோய் உடையவர்கள் வீட்டிலிருந்தே வேண்டிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆலயத்திற்குள் வரும் பக்தர்கள் SafeEntry அல்லது TraceTogether வசதியைப் பயன்படுத்தி நுழைய வேண்டும்.
மேலும், தைப்பூசத் திருவிழாவை பக்தர்கள் நேரடியாக காண www.sttemple.com என்ற இணையப்பக்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தில் சிங்கப்பூரில் இருந்து 179 பேர் திருச்சி திரும்பினர்!