திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு விமான பயணிகள் தங்கத்தைக் கடத்தி வரும் நிலையில், திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து. இன்று (ஆகஸ்ட் 23) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது, பயணி ஒருவர் வைத்திருந்த விளையாட்டுப் பொம்மைகளை பிரித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், உருளை வடிவில் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்ததைக் கண்டறிந்தனர். சுமார் ஆறு உருளை வடிவத் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, அந்த பயணியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வெளிநாட்டு பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து, பணத்தையும் பெற்றுக்கொண்டு கடமை தவறிய அதிகாரிக்கு சிறை
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 216.500 கிராம் என்றும், அதன் மதிப்பு 12.84 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் பதிவிட்டுள்ளனர்.
— Trichy Customs (Preventive) Commissionerate (@commrprevcustry) August 23, 2023