வியட்நாம் அதிபர் நூவென் சுவான் ஃபுக் (Nguyen Xuan Phuc, President of the Socialist Republic of Vietnam) மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வந்தார். அவரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். வியட்நாம் அதிபருடன் அவரது மனைவியும் சிங்கப்பூர் வந்துள்ளார். அத்துடன், வியட்நாம் நாட்டின் மூத்த அமைச்சர்கள், மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.
சிங்கப்பூரின் முதல் “ஸ்மார்ட்” தீயணைப்பு நிலையம் திறப்பு – வேற மாறி!
அதைத் தொடர்ந்து, இன்று (25/02/2022) வியட்நாம் அதிபர் இஸ்தானாவிற்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு ராணுவ அணி வகுப்பு மரியாதைக் கொடுக்கப்பட்டது. அதனையேற்றுக் கொண்ட வியட்நாம் அதிபர், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை நேரில் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கையும் நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் இடையேயான உறவை மீண்டும் உறுதிப்படுத்தினர். பொருளாதாரம், கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.
இச்சந்திப்பின் போது சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இங் எங் ஹென் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் தூதரகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வியட்நாம் அதிபர், பிப்ரவரி 26- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வியட்நாம் திரும்புகிறார்.