COVID-19 சோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாமல் சிங்கப்பூரர்கள் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படலாம், ஆனால் மலேசியர்களுக்கும் அதே போல பரஸ்பர ஏற்பாடு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய இரு நாடுகளிலிருந்தும் குடிமக்களை சுதந்திரமாக வருகை புரிய மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்த சிறை கைதிக்கு நோய்த்தொற்று உறுதி..!
சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய இரண்டும் மலேசிய சுகாதார அமைச்சகத்தால் பச்சை மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் திரு இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது புருனேயில் வசிக்கும் புருனே குடிமக்கள் மலேசியா நாட்டிற்கு வர அனுமதி தருகிறோம். எனவே, எங்கள் குடியேற்றத் துறையின் ஒப்புதல் அல்லது COVID-19 சோதனைகள் அல்லது தனிமைப்படுத்தல் ஆகியவை இல்லாமல் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் புருனே குடிமக்களுக்கு அனுமதி வழங்குவதாக அவர் கூறினார்.
இருப்பினும், குறிப்பிடப்பட்ட அதே சலுகைகள் மலேசியர்களுக்கும் வழங்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதாவது இருநாடுகளும் மலேசியர்களுக்கு எந்த விதப் பயணக்கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் இருக்க வேண்டும்; அப்போது தான் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறினார்.
இருநாடுகளுக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டும் என்று மலேசியா கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜுவெல் சாங்கியின் Rain Vortex அருவி, கடைகள் மற்றும் உணவகங்கள் மீண்டும் செயல்படும்..!