“மலேசிய பிரதமரை சிங்கப்பூருக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி”- பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் மலேசியா- சிங்கப்பூர் இடையேயான தரைவழி பயணத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக பேருந்து போக்குவரத்தை, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Malaysian Prime Minister Ismail Sabri Yaakob) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேற்பார்வையாளரின் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தியதற்காக ஊழியருக்கு சிறை

இந்நிகழ்ச்சியானது சிங்கப்பூர்- மலேசியா எல்லையான ஜொகூரில் உள்ள உட்லாண்ட்ஸ் சோதனை சாவடியில் (Woodlands Check point) இன்று (29/11/2021) காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரு நாட்டு அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முதல் அரசுமுறை வெளிநாட்டு பயணமாக சிங்கப்பூருக்கு வருகை தந்தார். அவருக்கு அரசு சார்பில் அணி வகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்த அவர், இரு தரப்பு உறவு, பொருளாதாரம், கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், வேலை வாய்ப்பு, இரு நாடுகளிடையேயான வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன. சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் “மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபை இன்று சிங்கப்பூருக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நமது நாடுகள் தனிமைப்படுத்துதலின்றி விமானம் மற்றும் தரைவழி பயணத்தை மீண்டும் தொடங்குகின்றன. பிரதமர் இஸ்மாயிலும் நானும், அவர் ஆகஸ்ட் மாதம் பதவியேற்றதிலிருந்து தொலைபேசியில் சில முறை உரையாடினோம், இறுதியாக நேரில் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தடுப்பூசிப் போடப்பட்ட பயண பாதை ஏற்பாடுகள் தொடங்கப்பட்டதன் மூலம், நீண்ட காலத்திற்குப் பிரிந்திருந்த குடும்பங்கள் மற்றும் இருபுறமும் உள்ள அன்புக்குரியவர்கள் மீண்டும் ஒன்றிணைக்க முடியும். VTL- களை படிப்படியாகவும், பாதுகாப்பாகவும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

சிங்கப்பூர் அதிபருடன் மலேசிய பிரதமர் சந்திப்பு!

எங்களுடைய நீண்ட கால மற்றும் பன்முக நட்பை ஆழப்படுத்த, பிரதமர் இஸ்மாயிலுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். பிரதமர் இஸ்மாயில் என்னை மலேசியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

‘VTL’ சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூர், மலேசியா இடையேயான விமான சேவையும் இன்று (29/11/2021) தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.