சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக இரு வெளிநாட்டு ஊழியர்களிடம் S$5,000 பணத்தையும் வாங்கி ஏமாற்றியதாக பெண் மீது புகார் எழுந்துள்ளது.
நோய்வாய்ப்பட்ட தனது தாயாருக்குப் பணம் தேவைப்பட்ட நிலையில், DHL சிங்கப்பூர் நிறுவனத்தில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வேலைகளைப் பெற்றுத் தருவதாக கூறி அவர் ஏமாற்றியுள்ளார்.
டிக்டாக்கில் சந்தித்த நண்பர்களான அவர்களை ஏமாற்றி S$5,000 பணத்தையும் அவர் வாங்கியுள்ளார்.
31 வயதான மலேசிய நாட்டை சேர்ந்த ஜெயந்தி சுப்ரமணியம் மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்டதால், இன்று (டிச 5) அவருக்கு ஆறு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் நடந்தபோது, ஜெயந்தி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
2021ஆம் ஆண்டு திரு ராஜப்பன் பாலகிருஷ்ணன் என்ற ஊழியருடன் சமூக ஊடக தளமான TikTok மூலம் நட்பை ஏற்படுத்திக்கொண்டார் ஜெயந்தி. பின்னர் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலம் நல்ல நட்பு பழக்கம் இருவருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயந்திக்கு பணம் கஷ்டம் இருந்துள்ளது. அதனை சரிசெய்ய ராஜப்பனை அவர் பகடையாக பயன்படுத்திக்கொண்டார்.
ஆகஸ்ட் 29 அன்று, ஜெயந்தி, இந்திய நாட்டவரான திரு ராஜப்பனைத் தொடர்பு கொண்டு, தான் DHL நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அங்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்.
இதை உண்மையென நம்பிய திரு ராஜப்பன் தனது நண்பரையும், வேறு சிலரையும் இந்த போலி வேலைக்குப் பரிந்துரைத்தார்.
இதனை அடுத்து திரு ராஜப்பன், தன் நண்பர்களுக்கும் வேலை வேண்டும் என ஜெயந்தியிடம் கூறியுள்ளார். இதற்கு வேலை மற்றும் வேலை அனுமதி விண்ணப்பங்களைச் செயல்படுத்த ஒவ்வொருவருக்கும் S$5,000 வேண்டும் என ஜெயந்தி கேட்டுள்ளார்.
அமௌன்ட் அதிகம் இருக்கே என ராஜப்பனுக்கு சந்தேகம் வந்தாலும், இது நல்ல வேலை என கூறி நிறுவனத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி அவரை நம்ப வைத்தார் ஜெயந்தி.
பெண்ணை நம்பிய திரு ராஜப்பன் பின்னர் தனது நண்பரின் கணக்கில் இருந்து S$5,000 மாற்றியதாக சொல்லப்பட்டுள்ளது.
மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் ஜெயந்தி, ஆனாலும் கொடுக்க மறுத்த ராஜப்பன் வேலை சம்மந்தமாக ஆவணங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார்.
பின்னர் பணம் கேட்பதை நிறுத்திய ஜெயந்தி, வேலை குறித்து பலமுறை சாக்குப்போக்குகளை அவரிடம் கூறி மழுப்பியுள்ளார்.
இறுதியாக திரு ராஜப்பன் அக்டோபர் 1 அன்று காவல்துறையில் புகார் அளித்தார், மூன்று நாட்களுக்குப் பிறகு ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
குற்றத்தை உணர்ந்த ஜெயந்தி தன்னை மன்னித்து தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு நீதிமன்றத்தில் மன்றாடி அழுதார்.
“என் அம்மா ஒரு டயாலிசிஸ் நோயாளி, அவர்களின் மருத்துவச் செலவுக்காக தான் நான் பணத்தை பெற்றேன்” என்று கலங்கினார்.
நேற்று டிசம்பர் 4 அன்று முழு பணத்தையும் அவர் திருப்பி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.