தமிழ்நாட்டு ஊழியரின் திருமணத்துக்காக சிங்கப்பூர் முதலாளி புதுக்கோட்டை வந்து சிறப்பித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் சிங்கப்பூரில் 2008 ஆம் ஆண்டு முதல் WTK Builder Pte Ltd, நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தனது திருமணத்தில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என முதலாளி வூன் தை குவான் மற்றும் மேலாளர் வூன் வை கியாட் ஆகியோரை அன்போடு அழைத்துள்ளார் மதியழகன்.
அழைப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஊழியரின் கிராமத்தில் நடந்த திருமணத்தில் இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அவர்களின் வருகை அந்த கிராமத்தில் பெருவிழா போல பார்க்கப்பட்டது. மேல தாளங்களுடன், பட்டாசு வெடித்து, குதிரை வண்டியில் அவர்களை கிராம மக்கள் வரவேற்றனர்.
திருமாங்கல்யத்தை முதலாளி தன் கையால் எடுத்துக்கொடுக்க, மதியழகன் – பாக்கியாஸ்ரீ திருமணம் சிறப்பாக நடந்தது.
அதோடு மட்டுமல்லாமல், வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவில், கொடைக்கானல் மற்றும் திருச்சி கல்லணை ஆகிய இடங்களும் இருவருக்கும் சுற்றிக்காட்டப்பட்டன.
இந்த வருகை எங்களுக்கு மிகவும் மறக்கமுடியாத ஒன்று என்று முதலாளி வூன் தை குவான் கூறியுள்ளார்.
தமிழர் திருமணத்தையும், தமிழ் கலாச்சாரத்தையும் நேரடியாக கண்டு கழித்தது மறக்க முடியாத ஒன்று என்றும், இந்தியாவிற்கு வருகை தந்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் சொன்னதாக மதியழகன் Tamil Micset Singapore செய்தியிடம் கூறினார்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்