சிங்கப்பூரில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு வருவோரிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் முன்னோடித் திட்டம் நேற்று (25-06-2021) முதல் செயல்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், சிங்கப்பூரில் உள்ள நான்கு மசூதிகளில் நேற்று தொழுகைக்காக வந்தவர்களிடம் COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை மேற்கொண்டதன் மூலம், ஒவ்வொரு இடத்திலும் மூன்று தொழுகை நேரம், ஒவ்வொன்றிலும் 100 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும், தொழுகைக்கான முன்பதிவுகள் அனைத்தும் முடிந்து, முன்பதிவு செய்தோரில் சுமார் 90 விழுக்காட்டினர் தொழுகையில் கலந்துகொண்டனர் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமீறல்: சிங்கப்பூரில் 117 பேருக்கு அபராதம் விதிப்பு.!
தொழுகைக்கு வருவோர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், அவர்கள் பரிசோதனை செய்யவேண்டிய கட்டாயமில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரத்தை அவர்கள் காண்பிக்க வேண்டும்.
மற்றவர்கள், கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பரிசோதனை சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். மசூதியிலிருந்து வெளியேறுவதற்கு முந்திய 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் மற்ற சமய அமைப்புகளுக்கு அடுத்த மாதம் முதல், 250 பேர் வரை கலந்துகொள்ளும் வழிபாட்டுச் சேவைகளை அனுமதிக்க முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 50 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கத்தோலிக்க தேவாலயப் பிரார்த்தனைகளும் அவற்றுள் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.