சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உள்பட அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்றுவதை சுகாதாரத்துறை அமைச்சகம் கட்டாயமாக்கியது. அதைத் தொடர்ந்து, கொரோனா பரவல் குறையத் தொடங்கியதாலும், கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களின் விகிதம் அதிகரித்தாலும், படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், அலுவலகத்திற்கு சென்று அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பணிபுரிய குறிப்பிட்ட அளவு பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பணியிடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையில் சில மாற்றங்கள் தொடர்பாக மனிதவள அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மூதாட்டி மீது காரை மோதிய 71 வயது முதியவருக்கு அபராதம்!
அதன்படி, சிங்கப்பூரில் பணியிடத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக செப்டம்பர் 8- ஆம் தேதி முதல் கட்டாய நடைமுறையொன்று கொண்டு வரப்பட்டது. பணியிடத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டால், அங்கு பணிபுரியும் மற்ற அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது அமலில் உள்ளது.
இந்த நடைமுறை மாற்றப்படுகிறது. பணியிடத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானால் மற்ற அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 22- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
‘டிபிஎஸ் வங்கியில் பணி’- விண்ணப்பிக்க அழைப்பு!
வேலையிடத்தில் இருந்து வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டால், அவர்கள் அதிகபட்சமாக 24 மணிநேரம் முன்னதாக ART பரிசோதனையை மேற்கொண்டு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தங்கள் உடல் நலனைக் கண்காணித்து வர வேண்டும். அவர்கள் வாரத்துக்கு இரண்டு முறையாவது ART பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அனைத்து நிறுவனங்களும் புதிய நடைமுறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கொரோனா தடுப்பூசியை முழுமையாக, அதாவது இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.