இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவின் மேற்கு பகுதியில் கடந்த நவம்பர் 21- ஆம் தேதி அன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என மேற்கு ஜாவா ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, 100- க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும், அவர்களை பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருவதாக தகவல் கூறுகின்றன.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த சியாஞ்சூர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 20,000- க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அதேபோல், உலக நாடுகளும் இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி மற்றும் மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுகளை அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் நிதியுதவியை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (Singapore Red Cross) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அவர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள், சுகாதாரமான குடிநீர், தங்குமிடம் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் சுமார் 50,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறது.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களில் பலர் குழந்தைகள் என்ற செய்திக் கேள்விப்பட்டு நாங்கள் வருத்தமடைகிறோம். இந்தோனேசியா செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், சமையல் கூடங்கள் அமைத்து உணவு தயாரித்து வழங்குவது, காயமடைந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி…!
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து நிலைமையை மதிப்பிடும், மேலும் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்க எங்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகளை அனுப்ப தயாராக இருக்கிறோம் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பெஞ்சமின் வில்லியம் (Benjamin William, Secretary General and CEO of Singapore Red Cross) தெரிவித்துள்ளார்.